அரசியல்

“நாங்கள் யாரும் குதிரை பேரம் நடத்தவில்லை” : அமைச்சர் செங்கோட்டையன்

 “அதிமுகவில் இருந்த எம்எல்ஏக்கள் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் ராஜினாமா செய்துள்ளனர். அதிமுக எம்எல்ஏக்களை நான் அழைத்து வந்து தவெகவில் சேர்ப்பதாக சொல்லும் குற்றச்சாட்டு தவறானது. பழனிசாமி என் மீது கோபத்தில் இருக்கிறார், அதனால் இதுபோல குற்றம்சாட்டுகிறார்” என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் செங்கோட்டையன் கூறும்போது, “பணநாயகத்தை வென்று ஜனநாயகத்தை காக்கும் முதல்வர் விஜய்யின் ஆட்சியின் செயல்பாடுகளை பார்த்து எல்லோரும் இன்று அவருடன் இணைந்துள்ளனர்.

ராஜினாமா செய்தவர்களுக்கு அதே தொகுதியில் மீண்டும் தவெக சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுமா என்பது போகப்போக தெரியும். எங்கள் ஆட்சியில் யாரும் குதிரை பேரம் நடத்தவில்லை. குதிரை பேரம் நடத்தியது யார் என்பது நாட்டுக்கே தெரியும். திமுக ஆதரவோடு நான் முதல்வர் ஆவேன் என்று சொன்னது யார் என்பதை தெரிந்துகொண்டு அவரிடம் இதற்கான பதிலை கேளுங்கள். அதிமுகவில் இருந்த எம்எல்ஏக்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் ராஜினாமா செய்துள்ளனர்.

புதிய ஆட்சி வந்துள்ளது, மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ளது. எனவே ஆறு மாத காலம் பொறுத்திருந்தே விமர்சிப்போம் என எதிர்க்கட்சியான திமுக சொன்னதா இல்லையா? நாங்களும் பொறுத்திருந்தே ஒவ்வொன்றாக செய்ய முடியும். எங்களுக்கும் அவகாசம் கொடுக்க வேண்டும்.

குற்றங்கள் நடக்கும்போது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவை சிறுமி விவகாரத்தில் குற்றவாளி உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இதில் காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும்.

அதிமுக எம்எல்ஏக்களை நான் அழைத்து வந்து தவெகவில் சேர்ப்பதாக சொல்லும் குற்றச்சாட்டு தவறானது. நான் யாரையாவது அழைத்து வந்து சேர்த்தேனா? பழனிசாமி என் மீது கோபத்தில் இருக்கிறார், அதனால் இதுபோல குற்றம்சாட்டுகிறார்.

ஜெயலலிதா, எம்ஜிஆர் படங்கள் தேவையில்லை, தன் படம் போதும் என பழனிசாமி நினைத்தார்” என்று கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button