ஹூப்ளி – ராமேசுவரம் ரயில் பரமக்குடியில் நின்று செல்ல வேண்டும்-மதுரை கோட்ட மேலாளரிடம் பயணிகள் ஆலோசனை குழு கோரிக்கை!!!

ராமநாதபுரம் மாவட்டம்,பரமக்குடி ரயில் நிலையத்தை ஆய்வு செய்வதற்காக வருகை தந்த மதுரை ரயில்வே கோட்ட மேலாளரை நேரில் சந்தித்து ரயில்வே பயணிகள் ஆலோசனைகுழு உறுப்பினர் ஏ.ஜெய்னுல் ஆலம் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
ஹூப்ளி-ராமேசுவரம் சிறப்பு ரயிலுக்கு பரமக்குடியில் நிறுத்தம் இல்லாத காரணத்தினால்,பரமக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.மேலும்,பரமக்குடி ரயில் நிலையம் ஒரு ‘NSG 4’ தரவரிசை பெற்ற ரயில் நிலையமாகும்; 2024-26 நிதியாண்டிற்கான இதன் வருவாய் ரூ. 11,09,24,860 ஆகவும், பயணிகளின் வருகை (Footfall) 15,98,816 ஆகவும் உள்ளது.
ஹூப்ளி – ராமேசுவரம் சிறப்பு விரைவு ரயில்,ஓசூர் மற்றும் பெங்களூருவின் தொழில் மற்றும் மின்னணு நகரங்களை இணைக்கிறது. பரமக்குடியை அந்நகரங்களுடன் இணைக்கும் ஒரே ரயில் இதுவேயாகும்.பரமக்குடி ரயில் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பலர் அந்நகரங்களில் பணிபுரிகின்றனர்.
எனவே,வண்டி எண் 07355/07356 ஹூப்ளி – ராமேசுவரம் சிறப்பு ரயில்,பரமக்குடியில் (PMK) நின்று செல்ல உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்குமாறு பயணிகள் ஆலோசனை குழுவின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.



