ராமநாதபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது
ராமநாதபுரம்,ஜீன்.23:-
ராமநாதபுரத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று,குறைகளை கேட்டறிந்து,மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 13 பயனாளிகளுக்கு ரூ.4,65,660/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் குறித்த 623 மனுக்கள் பெற்று மனுதாரரின் முன்னிலையில் மனுக்களை விசாரணை செய்து தொடர்புடைய அலுவலர்களிடம் மனுக்களை வழங்கி உரிய நடவடிக்கையினை விரைந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் வீட்டுமனை பட்டா,முதியோர் உதவித்தொகை,தனிநபர் வீடு வழங்கும் திட்டம்,குடிநீர் இணைப்பு வழங்குதல் உள்ளிட்டவை தொடர்பாக பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:-
ஒவ்வொரு வாரமும் பொதுமக்களிடம் பெறக்கூடிய மனுக்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஒருமாத காலத்திற்குள் மனுதாரர்களுக்கு உரிய தீர்வு வழங்கிட வேண்டும் எனவும்,தீர்வு வழங்க முடியாத மனுக்கள் நிலை குறித்து மனுதாரர்களிடம் அலுவலர்கள் எடுத்துரைக்க வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.மேலும் பொதுமக்கள் வழங்கும் மனுக்களுக்கு துறைசார்ந்த அலுவலர்கள் சிறப்பு கவனம் எடுத்து செயல்பட வேண்டும்
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக மாவட்ட கலெக்டர்,மாவட்ட வளர்ச்சி கூட்டரங்கில்,கடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் பெறப்பட்ட மனுக்களின் நிலை தொடர்பாகவும்,மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாகவும் துறை சார்ந்த அலுவலர்களிடம் ஆய்வு மேற்கொண்டு கேட்டறிந்தார்.அதனைத்தொடர்ந்து,சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினம் ஜூன் – 16-ஐ முன்னிட்டு,நடைபெற்ற பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப்போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவிகளுக்கு மாவட்ட கலெக்டர் பரிசு,பாராட்டுச்சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினார்.

மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 04 பயனாளிகளுக்கு தலா ரூ.72,000/- வீதம் ரூ.2,88,000/- மதிப்பீட்டில் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகளையும்,09 பயனாளிகளுக்கு தலா ரூ.19,740 வீதம் ரூ.1,77,660/- மதிப்பிலான செயற்கை கால் மற்றும் காளிப்பர்கள் என மொத்தம் 13 பயனாளிகளுக்கு ரூ.4,65,660/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
இக்கூட்டத்தில் டி.ஆர்.ஓ வ.சங்கரநாராயணன்,மாவட்ட சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் கிருஷ்ணகுமாரி,ராமநாதபுரம் ஆர்.டி.ஓ செ.ஹபிபூர் ரஹ்மான்,மாவட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ்,ஆர்.டி.ஓ (பொ) பரமக்குடி கலைமன்னன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



