பெரியபட்டிணம் ஊராட்சிக்குட்பட்ட தெற்கு புதுக்குளம் கிராமத்திற்கு பேருந்து வசதி…!

ராமநாதபுரம் மாவட்டம்,திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், பெரியபட்டிணம் ஊராட்சிக்குட்பட்ட தெற்கு புதுக்குளம் கிராம பொதுமக்கள் தங்கள் கிராமத்திற்கு பேருந்து வசதி இல்லாத காரணத்தினால் மாணவ,மாணவியர்கள் பள்ளி மற்றும் கல்லூரிக்கு சென்று வருவதற்கும், கிராமப் பொதுமக்கள் வெளியூர் சென்று வருவதற்கும் மிகவும் சிரமப்பட்டு வருவதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு அந்த கிராமத்தைச் சேர்ந்த மாணவ,மாணவியர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவின்படி,தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு.வே.க.ராஜீவ் மற்றும் மாவட்ட கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோர் தெற்கு புதுக்குளம் கிராமத்திற்கு நேரில் சென்று அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களை சந்தித்து விவரம் கேட்டறிந்ததுடன்,அப்பகுதியில் போக்குவரத்து வசதிக்கான சாலையினை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.அப்போது சில இடங்களில் மின்கம்பங்கள் போக்குவரத்துக் இடையூறாக இருப்பதை கண்டறிந்து அவற்றை மின்வாரியத்துறை மூலம் உடனடியாக மாற்று இடத்திற்கு வைத்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தியதுடன்,புதுக்குளம் கிராமத்திற்கு விரைவில் பேருந்து இயக்கப்படும் என பொதுமக்களிடம் தெரிவித்தார்.தொடர்ந்து தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் பள்ளி மாணவ,மாணவியர்களை சந்தித்து பாடப்புத்தகம் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கி நன்றாக கல்வி பயில வேண்டும் என தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) திவ்யான்ஷீநிகம்,தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கோட்ட மேலாளர் பத்மகுமார்,கீழக்கரை தாசில்தார் இராமசுப்பு மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.



