இராமநாதபுரம் சந்தைகளில் முத்திரையிடப்படாத தராசுகள்:பொருட்களின் எடை குறைவால் ஏமாற்றப்படும் மக்கள்:ஆய்வு செய்ய கோரிக்கை!!!

இராமநாதபுரம் மாவட்டத்தில் நகர்,கிராமங்களில் பஜார் பகுதியில் நடைபாதை,தள்ளு வண்டிகளில் முத்திரையிடப்படாத தராசுகள்,எடை கற்களை பயன்படுத்தி சில வியாபாரிகள் தொடர்ந்து வியாபாரம் செய்வதால் எடை குறைவால் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர்.அதிகாரிகளின் ஆய்வு செய்து வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும்,மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொழிலாளர் துறை சட்டப்படி மின்னணு தராசுகள் ஆண்டுக்கு ஒரு முறையும்,எடைக்கற்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை முத்திரையிடப்பட வேண்டும்.அவ்வாறு சரியான முத்திரையிடப்படாத தராசுகள் மற்றும் எடை கற்கள்,தரமற்ற எடையளவுகள் ஆகியவை தொழிலாளர் நலத்துறையினரால் பறிமுதல் செய்யப்படுகின்றன.
இந்நிலையில் இராமநாதபுரம் நகரில் பஜார்,மீன் மார்க்கெட்,உழவர் சந்தை,வாரச்சந்தை உள்ளிட்ட இடங்களிலும்,மாவட்டம் முழுவதும் வாரச்சந்தைகளிலும் இதுபோன்ற முத்திரையிடப்படாத மின்னணு தராசுகள், வட்டத் தராசுகள், எடைகற்கள் உள்ளிட்டவற்றை சில வியாபாரிகள் பயன்படுத்துகின்றனர்.
வாரச் சந்தைகளில் தள்ளுவண்டி,தரைக்கடைகளில் மிகவும் தேய்மானமான எடை கற்களை சிலர் பயன்படுத்துகின்றனர்.மேற்கண்ட இடங்களில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து முத்திரையிடப்படாத தராசுகளை பறிமுதல் செய்து,முத்திரையின் அவசியம் குறித்து வியாபாரிகளிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
இதுகுறித்து இராமநாதபுரம் தொழிலாளர் துறை உதவி ஆணையர் மலர்விழி கூறுகையில்:-
முன்பு போல நாங்களாகவே ஆய்வுக்கு செல்ல முடியாது.மக்களின் புகாரின் பேரில் சென்னை ஆணையர் அலுவலகத்தில் அனுமதி பெற்றுதான் ஆய்வுக்கு செல்ல முடியும்.சமீபத்தில் ஆர்.எஸ்.மங்கலத்தில் சந்தையில் ஆய்வு செய்த போது புரிதல் இல்லாமல் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இவ்விஷயத்தில் வியாபாரிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.எடை குறைவு குறித்து மக்கள் புகார் அளித்தால் உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.



