மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு கருப்புகொடி:இராமநாதபுரத்தில் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் விடுதலை!!!

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு இராமநாதபுரம் அருகே கருப்புக்கொடி காட்டிய 2 வழக்குகளில் இரண்டு முன்னாள் அமைச்சர்கள் உள்பட அனைவரும் கோர்ட்டில் விடுதலை செய்யப்பட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து வந்தது. இதை கண்டித்து தமிழகத்தில் திமுக சார்பில் பல்வேறு எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் இராமநாதபுரம் மாவட்டத்திற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை தந்தார்.மதுரை விமான நிலையத்தில் காவிரி மேலாண்மை விசயத்தில் மத்திய அரசு தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாது என்று தெரிவித்தார்.

இதனை கண்டித்து பார்த்திபனூர் எல்லை பகுதியில் திமுகவினர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக பார்த்திபனூர் போலீசார் இரண்டு வழக்குகள் பதிவு செய்தனர். முன்னாள் அமைச்சர்கள் சுப.தங்கவேலன், சத்தியமூர்த்தி, முன்னாள் எம்எல்ஏக்கள் முருகவேல், திசை வீரன், முன்னாள் மாவட்ட செயலாளர் திவாகரன், முன்னாள் மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் பெருநாழி போஸ் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த 2 வழக்கு விசாரணையும் கடந்த சில வருடங்களாக ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் எண் 1 கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நிலவேஸ்வரன் மேற்கண்ட 2 வழக்குகளில் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.



