ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி படகுகளை ஆய்வு செய்ய குழுக்கள்:கலெக்டர் தகவல்

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செய்திக் குறிப்பில் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்கு படுத்தும் சட்டம் 1983-ன் படி ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி தடைகாலத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத விசைப்படகுகளை ஆய்வு செய்வது வழக்கம்.இதன் படி 2026 ம் ஆண்டு தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்கு படுத்தும் சட்டம் 1983-ன் படி ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகளை நேரடியாக ஆய்வு செய்திடும் பொருட்டு ஆய்வுக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது.
இக்குழுவானது,ராமநாதபுரம் (வடக்கு) (எஸ்.பி.பட்டினம் ஆற்றாங்கரை) மற்றும் ராமநாதபுரம் (தெற்கு) (புதுமடம் ரோச்மாநகர்) பகுதியிலுள்ள விசைப்படகுகளை 08.06.2026 அன்றும், மண்டபம் (நாகாச்சி தோணித்துறை) மற்றும் ராமேசுவரம் பகுதியிலுள்ள விசைப்படகுகளை 03.06.2026 அன்றும், நேரடி ஆய்வு செய்ய உள்ளது.மேலும், ராமநாதபுரம் (வடக்கு) பகுதியிலுள்ள நாட்டுப்படகுகளை 22.05.2026 அன்றும், ராமநாதபுரம் (தெற்கு) பகுதியிலுள்ள நாட்டுப்படகுகளை 01.06.2026 அன்றும் மண்டபம் மற்றும் ராமேசுவரம் பகுதியிலுள்ள நாட்டுப்படகுகளை 25.05.2026 அன்றும் ஆய்வு செய்ய உள்ளது.
இவ்வாய்வில் கடலில் படகின் நிலைப்புத்தன்மை (seaworthiness), படகின் நீளம்,அகலம்,இயந்திரத்தின் குதிரைத்திறன்,உயிர்காப்பு சாதனங்கள் மற்றும் தொலைதொடர்பு கருவிகள் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்படும்.ஆய்வில் காண்பிக்கப்படாத மற்றும் தகுதி இல்லாத விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு படகுகளின் பதிவுகள் மற்றும் மானிய விலையிலான டீசல் நிறுத்தம் செய்யப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



