ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் ஆபரேஷன் ஷுல்ட்நெட் குற்றத்தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை காவல் நடவடிக்கைகள்:போலீஸ் சூப்பிரண்டு தகவல்!!!

ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜி.சந்தீஷ் ஐ.பி.எஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:-
ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் 20.05.2026 முதல் “Operation SHIELDNET” என்ற பெயரில் தீவிர குற்றத் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை காவல் நடவடிக்கைகள் மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாவட்டம் முழுவதும் ஒருங்கிணைந்த வகையில் நடைபெறும் இந்த நடவடிக்கையின் கீழ்,ரவுடி மற்றும் தொடர்குற்றவாளிகள் கண்காணிப்பு, நீண்டநாள் நிலுவையில் உள்ள பிடியாணைகள் (NBW) நிறைவேற்றுதல், தீவிர வாகன சோதனைகள், BNSS சட்ட பிரிவு 126ன் கீழ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல், மற்றும் தொடர் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த நடவடிக்கை தற்போது மூன்றாவது நாளை எட்டியுள்ள நிலையில், காவல்துறையினர் 1114 சந்தேக நபர்களை சோதனை செய்துள்ளனர்.இதில் 91 சரித்திர பதிவேட்டில் உள்ளவர்கள் அடங்குவர். பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்த 04 பழங்குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் நீண்டநாள் நிலுவையில் இருந்த 33 பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அதேபோல் BNSS சட்ட பிரிவு 126-ன் கீழ் 12 நபர்களுக்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வாகன சோதனைகளின் போது பதிவு எண் இல்லாமல் இயக்குதல், அதிவேகம் மற்றும் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல், கண் கூசும் விளக்குகள் பொருத்துதல், விதிமுறைகளை மீறி வாகனத்தில் மாற்றங்கள் செய்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக 469 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.மேலும் ஜாமீன் ரத்து நடவடிக்கைகள் மற்றும் தொடர்ந்து குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு, குற்றவாளிகள் மீது வலுவான வழக்குப்பதிவு செய்தல் மற்றும் தண்டனை பெறுவதை உறுதி செய்ய காவல்துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
மேலும், பெண்கள் பாதுகாப்பிற்காக உட்கோட்டம் வாயிலாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு முக்கிய இடங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கஞ்சா, புகையிலை தொடர்பாக தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள் மூலம் சுமார் 13 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 4 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களும் இணைந்து குற்றவாளிகள் மற்றும் குற்றச்செயல்களுக்கு எதிரான இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொள்ளும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



