பள்ளி மேல்நிலைப் படிப்பு முடித்தவர்கள் 100% சதவீதம் பட்ட மேற்படிப்பு படித்திட வேண்டும்:மாவட்ட கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் வேண்டுகோள்…!

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று (11.06.2026) பள்ளிக்கல்வி துறையின் மூலம் மாவட்ட கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் தலைமையில்,அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர்கள் முன்னிலையில் மீளாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைத்து மாணக்கர்களும் உயர்கல்வி படிப்பை தொடர வேண்டும்.அதற்கு தலைமையாசியர்களும்,மேலாண்மை குழு தலைவர்களும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு பகுதிகளிலும் 12-ம் வகுப்பு முடித்தவர்களின் விவரம் எளிதாக உங்களால் கண்டறிய முடியும். அந்த வகையில் நடப்பாண்டில் 12-ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றவர்கள் எத்தனை பேர் கல்லூரி படிப்பு மற்றும் தொழில்நுட்ப கல்லூரி படிப்பிற்கு சென்றுள்ளார்கள், எத்தனை பேர் படிப்பை தொடரவில்லை என்பதை கண்டறிந்து அவர்களுக்கு உயர்கல்வியின் பயன்கள் குறித்து எடுத்து சொல்லி பட்டப்படிப்பில் சேருவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அது மட்டுமின்றி மாவட்டத்தில் நடப்பாண்டில் 12-ம் வகுப்பு படித்த அனைவரும் அதாவது 100% உயர்கல்வியில் சேர்ந்துள்ளார்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும் நடப்பாண்டில் அரசு பொதுத்தேர்வில் தோல்வியுற்றவர்களையும் கண்டறிந்து அவர்களை தோல்வியுற்ற பாடங்களுக்கு தேர்வு எழுத வைத்து தேர்ச்சிப் பெற்றபின் உயர்கல்வி படிப்பை தொடர உறுதுணையாக இருக்க வேண்டும்.மேலும் மாணவர்களின் உயர்கல்விக்கு கல்வி கொடையாளர்களை அணுகி பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
எனவே மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் தலைமையாசிரியர்களும்,மேலாண்மை குழு தலைவர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு அனைத்து மாணவர்களும் உயர்கல்வி படிப்பை தொடர்வதை உறுதி செய்திட வேண்டுமென மாவட்ட கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எல்.ரெஜினி,உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பத்பநாபன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



