நடப்பாண்டில் 10,912 மாணவ,மாணவிகள் பயன்பெறுவார்கள்:பரமக்குடியில் மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தகவல்!!!

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஹைராத்துல் ஜமாலியா கீழ முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை மூலம் அரசு/அரசு உதவி பெறும் பள்ளியில் மேல்நிலை முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்,இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி,திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் இராம.கருமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தலைமையேற்று மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கல்விக்கு சிறப்பு கவனம் எடுத்து பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறார்கள்.காரணம் கல்வி ஒவ்வொரு மாணவ செல்வத்திற்கும் நிலையான சொத்தாக இருந்து வருகிறது. ஒருவர் முழுமையான கல்வி பெற்றால் அவர் வாழ்வில் எல்லா நிலையிலும் முன்னேற்றம் காண முடியும்.அத்தகைய முன்னேற்றத்திற்கான கல்வியை அனைவரும் முழுமையாக பெற வேண்டும் என்ற நோக்குடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறார்கள்.அதனடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலை முதலாம் ஆண்டு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்படுகிறது.

நடப்பாண்டிற்கு மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் இத்திட்டத்தை இன்று துவக்கி வைத்துள்ளார்.அதன் அடிப்படையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று 10 பள்ளிகளைச் சேர்ந்த 875 மாணவர்களுக்கும்,868 மாணவிகளுக்கும் என 1743 மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கி துவக்கி வைக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் அந்தந்த பள்ளியில் வழங்கப்படும்.இதன் மூலம் மாவட்டத்தில் 10912 மாணவ,மாணவிகள் விலையில்லா மிதிவண்டி பெற்று பயன்பெற உள்ளனர்.இதன் மூலம் மாணவ,மாணவிகள் கல்வி கற்பதற்கு பயனுள்ள வகையில் இந்த மிதிவண்டிகள் இருந்து வருகிறது.இது போல் மாணவ,மாணவிகள் பயன்பெறும் வகையில் புதுமைப்பெண் திட்டம்,நான் முதல்வன் திட்டம்,தவப்புதல்வன் திட்டம்,காலை உணவு திட்டம் என எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு இந்தியாவில் மற்ற மாநிலங்கள் பின்பற்றும் வகையிலான திட்டமாக போற்றப்படுகிறது.இத்தகைய பெருமைகளுக்கும் காரணம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் திட்டங்களை ஆகும்.இத்தகைய அரசு திட்டங்களை மாணவ செல்வங்கள் சிறந்த முறையில் பயன்படுத்தி உயர்கல்வி வரை படித்து சிறந்த பணிகளுக்கு சென்று பயன்பெற்றிட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எல்.ரெஜினி,மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் இராஜா,பரமக்குடி நகர் மன்றத்தலைவர் சேது கருணாநிதி,மாவட்ட கல்வி அலுவலர் சங்கர்,நகர்மன்ற உறுப்பினர் ஜெயபாரதி,பரமக்குடி ஹைராத்துல் ஜமாலியா கிழ முஸ்லீம் மேல்நிலைப்பள்ளி தாளாளர் அஜ்மல்கான் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



