தமிழகம்மாவட்டச் செய்திகள்

நரிப்பையூரில் பனைபொருள் வர்த்தக மையம்:அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அடிக்கல் நாட்டினார்!!!

இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டம், நரிப்பையூரில் கதர் வாரியத் துறையின் மூலம் பனைபொருள் வர்த்தக மையம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் மற்றும் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்தறை செயற்பதிவாளர் வா.சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தலைமையேற்று கதர் வாரியத் துறையின் மூலம் ரூ.163 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள பனைபொருள் வர்த்தக மைய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பனைவாரிய அமைப்புகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.அதிலும் இப்பகுதி அதிகளவு பனை மரங்கள் கொண்ட பகுதியாக உள்ளதால் இப்பகுதியில் உள்ள பனைவாரிய தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் பனைபொருள் வர்த்தக மையம் அமைக்க உத்தரவிட்டு இன்று பணி துவங்குவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

இதன் மூலம் இப்பகுதியில் 88 சங்கங்கள் மூலம் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் வேலைவாய்ப்பு பெற்று பயன் பெறும் வகையில் பனைபொருள் வர்த்தக மையம் செயல்பட உள்ளன.

பொதுவாக பனை மரத்தில் எவ்வித கழிவு பொருட்களுமின்றி வேர் முதல் குறுத்து பகுதி வரை அனைத்து பொருட்களும் மக்கள் பயன்பாட்டிற்கு பெரிதும் பயன்பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக பனைவெல்லம், பதனீர் போன்ற பொருட்கள் ஏற்றுமதி அளவிற்கு மதிப்பூட்டப்பட்ட பொருளாக இருந்து வருகின்றன.

மேலும் பனை ஓலையில் கலை நயமிக்க அழகு சாதன பொருட்கள் தயாரிக்கப்பட்டு மக்கள் விரும்பி வாங்கும் வண்ணம் இப்பகுதியில் கதர் துறையின் மூலம் கலைநயமிக்க பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதியில் பனைவாரிய தொழிலாளர்கள் வேண்டுகோளுக்கிணங்க பொருளாதாரம் மேம்பாடு அமையும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கி வருகிறார்கள். இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இதுபோன்ற திட்டங்கள் மூலம் அரசு நலத்திட்ட உதவிகளைப் பெற்று வாழ்வாதாரத்தை மேம்பாடு அடையும் வகையில் பயன்பெற்றிட வேண்டும்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இப்பகுதியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுக்கிணங்க ரூ.26 கோடி மதிப்பீட்டில் சுற்றுசாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அதே போல் ரூ.20 கோடி மதிப்பீட்டில் ரோஸ்மா நகர் பகுதியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுமட்டுமின்றி சாயல்குடி சுற்றி புறவழிச்சாலை அமைப்பதற்கான திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல் இராமநாதபுரம் மாவட்டத்திற்கு தனி திட்டமாக காவிரி கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் விரைவில் முடிவறும் நிலையில் உள்ளது. இத்திட்டத்தையும் விரைவில் துவக்கி வைக்கப்படும். இதுபோல் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எண்ணற்ற திட்டங்களை வழங்கி வருகிறார்கள். பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அண்ணல் மகாத்மா காந்தியடிகளின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தியதுடன், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து, மரக்கன்றுகள் நடவு செய்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கதர் துறை துணை இயக்குநர் பாரதி,உதவி இயக்குநர்கள் டீ.எபநேசர்,முத்துக்குமார்,தமிழ்நாடு மாநில பனைவெல்லம் மற்றும் தும்பு விற்பனை கூட்டுறவு இணையம் லிட் செயலாட்சியர் க.செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button