தெற்கு ரயில்வேயின் புதிய தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி நியமனம்!!!

எஸ்.என்.நரேன்,இன்று தெற்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரியாகப் பொறுப்பேற்றார்.

இந்தப் பதவிக்கு முன்பு எஸ்.என்.நரேன் மத்திய பெட்ரோலியம்,இயற்கை எரிவாயு மற்றும் சுற்றுலாத் துறை இணை அமைச்சரின் தனிச்செயலாளராகப் பணிமாற்றத்தில் பணியாற்றி வந்தார்.
2010-ம் ஆண்டு தொகுதியைச் சேர்ந்த இந்திய ரயில்வே போக்குவரத்து சேவை (IRTS) அதிகாரியான எஸ்.என்.நரேன் இந்திய ரயில்வேயில் பயணிகள் வசதிகள்,செயல்பாட்டுத் திறன்,டிஜிட்டல் தகவல் தொடர்பு மற்றும் பொதுத் தொடர்பு தொடர்பான பல முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.
எஸ்.என்.நரேன் தெற்கு ரயில்வேயின் பல்வேறு கோட்டங்களில் உள்ள செயல்பாடுகள் மற்றும் வர்த்தகப் பிரிவுகளில் பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார்.பின்னர் அவர் புது தில்லிக்கு அயற்பணியில் சென்று, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரி தொழில்நுட்பத் துறையில் துணைச் செயலாளராகவும்,மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் சுற்றுலாத் துறை இணை அமைச்சரின் தனிச் செயலாளராகவும் பணியாற்றினார்.தெற்கு ரயில்வேயில் பணியாற்றிய காலத்தில்,திருச்சிராப்பள்ளி கோட்டத்தின் சிரேஷ்ட கோட்ட வர்த்தக மேலாளர்,தெற்கு ரயில்வேயின் துணை தலைமை செயல்பாட்டு மேலாளர் (போக்குவரத்து பாதுகாப்பு), சென்னை மற்றும் பாலக்காடு கோட்டங்களின் கோட்ட வர்த்தக மேலாளர்,மற்றும் சேலம் கோட்டத்தின் கோட்ட செயல்பாட்டு மேலாளர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்துள்ளார்.மேலும்,இந்திய ரயில்வேயின் பல முக்கிய திட்டங்கள் மற்றும் கொள்கை முன்னெடுப்புகளைச் செயல்படுத்துவதிலும் அவர் ஈடுபட்டுள்ளார்.
எஸ்.என்.நரேன் கோயம்புத்தூரில் உள்ள பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் இயந்திரப் பொறியியலில் பட்டம் பெற்றவர்.தற்போது ராயபுரம் லோகோ ஷெட்டின் சிரேஷ்ட கோட்ட மின் பொறியாளராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள எம்.செந்தமிழ் செல்வனுக்குப் பதிலாக இவர் இந்தப் பதவியைப் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



