
எஸ்.டி.பி.ஐ கட்சியின் ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் பெரியபட்டினம் எஸ்.ரியாஸ்கான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்திற்கு வருடத்திற்கு 10 லட்சத்துக்கும் மேலான சுற்றுலா பயணிகள்,பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் வருகை புரிகின்றனர்.ஆனால் ராமேசுவரம் ரயில் நிலையத்தில் ஒரே ஒரு ரிசர்வேஷன்,பொது டிக்கெட் மற்றும் விசாரணை கவுண்ட்டர் என அனைத்தையும் ஒன்றாக நடத்துவது பொதுமக்களுக்கு கடும் அவதியை ஏற்படுத்துகிறது.
மணிக்கணக்கில் கால் கடுக்க காத்து கிடக்கும் முதியவர்கள்,பெண்கள்,மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகள் என கூட்ட நெரிசலால் ரயில்களை தவறவிடும் அவலம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.உலகத்தரம் வாய்ந்தது என வெற்று விளம்பர தம்பட்டம் அடிக்கும் ஒன்றிய அரசு சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை கண்டு கொள்ளாமல் இருப்பது உண்மையில் இவர்கள் மீது அக்கறை இல்லை என்பதை வெளிக்காட்டுகிறது.மேலும் பொதுமக்களை ஓட்டுக்கு மட்டுமே பயன்படுத்துவது தெளிவாக தெரிகிறது.உடனடியாக கூடுதல் முன்பதிவு மையங்களையும்,முன்பதிவு,பொது டிக்கெட் மற்றும் விசாரணை ஆகியவற்றுக்கு தனி,தனி மையங்களை அமைத்திட வேண்டும் எனவும் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களின் நேர விரயத்தை தடுத்து நெரிசல் இல்லாத சேவையை உறுதி செய்ய வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.நூற்றாண்டு கால பாம்பன் பாலம் இருந்தும் நவீனரக பாலங்கள் கட்டியும்,சில ரயில்கள் மட்டும் நின்று செல்லும் அவலத்தில் உள்ளது பாம்பன் ரயில் நிலையம்.இந்த வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலாத்தலத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்வதற்கு உடனடியாக ஆவண செய்திட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.அதே போன்று உச்சிப்புளி ரயில்வே கேட் அதிக பிரச்சினையை பொது மக்களுக்கு ஏற்படுத்துகிறது.சுமார் தினமும் 20-க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன.சுற்றுலா பயணிகள்,பொதுமக்கள் காத்திருக்கக்கூடிய அவல நிலை ஏற்படுகிறது.பல சமயங்கள் ரயில்வே கேட் பழுதடைந்து மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல்,அலைச்சல் மன உளைச்சல் ஏற்படும் வண்ணம் உள்ளது.இதனை கருத்தில் கொண்டு உடனடியாக ரயில்வே மேம்பாலம் அமைத்திட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.மேலும் ரயில்வே துறை நூற்றாண்டுகள் கடந்தும் இன்னும் கால் பதிக்காத கீழக்கரை,பனைக்குளம்,தேவிபட்டினம் தொண்டி ஆகிய பகுதிகளில் ரயில் தண்டவாளங்கள் அமைத்து அந்த மக்களுக்கும் ரயில்களை இயக்கி அவர்களுக்கும் ரயிலில் பயணிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக கோரிக்கை விடுகின்றேன்.மக்களுக்காக தான் அனைத்து துறைகளும் என்பதை உறுதி செய்யும் வகையில் மக்கள் நல கோரிக்கையை ஏற்று உடனடியாக செவி சாய்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



