கண்டமாக்கப்பட்ட கவுன்சிலர்:நகராட்சி கூட்டத்தில் நடந்த ருசிகர சம்பவம்…!

கீழக்கரை நகராட்சி கூட்டத்தில் அனைத்து சமுதாய கூட்டமைப்பை சேர்ந்த கவுன்சிலர் சேக் உசேன் நகராட்சியில் அரசின் திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை,இதுவே நான் கலந்து கொள்ளும் கடைசி கூட்டம் என கூறி சேர்மன் மீதான அதிருப்தி காரணமாக கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார்.அவரை மீதமுள்ள 21 கவுன்சிலர்களும் கூட்டாக கண்டனம் தெரிவித்து கண்டமாக்கியது கவுன்சிலர்களின் ஒற்றுமை ஓங்கியுள்ளதை நிரூபணம் செய்தது.
ராமநாதபுரம் மாவட்டம்,கீழக்கரை நகராட்சி கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் துவங்கி சேர்மன் பை.செஹானஸ் ஆபிதா தலைமையில் நடைபெற்றது.

துணை சேர்மன் வழக்கறிஞர் வி.எஸ்.ஹமீது சுல்தான் முன்னிலை வகித்தார்.கமிஷனர் கிருஷ்ணவேணி அனைவரையும் வரவேற்றார்.கணக்காளர் தமிழ்ச்செல்வன் தீர்மானங்கள் வாசித்தார்.அனைத்து வார்டு கவுன்சிலர்களும் தங்கள் பகுதியில் உள்ள பொதுமக்களின் அடிப்படை தேவை குறித்து விவாதித்து விளக்கம் பெற்றனர்.இறுதியில் பேசிய அனைத்து சமுதாய கூட்டமைப்பை சேர்ந்த 20-வது வார்டு கவுன்சிலர் சேக் உசேன் நகராட்சி திட்டங்களை குறை கூற விரும்பவில்லை.அரசின் திட்டங்களை முழுமையாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.சேர்மனின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை எனக்கூறி கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார்.இக்கூட்டத்தில் மொத்தம் 21 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.முடிவில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் பரக்கத்துல்லா நன்றி கூறினார்.தேசிய கீதம் இசைக்க கூட்டம் நிறைவு பெற்றது.முன்னதாக தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஜோசப் விஜய்க்கும்,ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராமநாதபுரம் தி.மு.க மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏவுக்கும் நகர்மன்ற கூட்டத்தில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
அனைத்து சமுதாய கூட்டமைப்பு கவுன்சிலர் சேக் உசேனுக்கு கண்டனம்:-

கீழக்கரை நகராட்சியில் அரசின் நலத்திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை,சேர்மனின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லை எனக்கூறி கவுன்சிலர்கள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த அனைத்து சமுதாய கூட்டமைப்பை சேர்ந்த 20-வது கவுன்சிலர் சேக் உசேனுக்கு எஞ்சிய 21 கவுன்சிலர்களும் கூட்டாக கண்டனம் தெரிவித்து நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:-
கீழக்கரை நகராட்சியில் கடந்த தி.மு.க ஆட்சியில் எண்ணற்ற மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் கொண்டு வரப்பட்டது.அவற்றில் ஒரு சில திட்டங்கள் மக்களை சென்றடையாமல் இருந்தாலும் 98% மக்களுக்கான நலத்திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளது.கடந்த 4 1/2 ஆண்டுகளாக பதவி வகித்து வரும் சேர்மன்,துணை சேர்மன் நகரில் வசிக்கும் பொதுமக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளனர்.நாங்கள் அனைவரும் பல்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் மதங்களை கடந்து மனிதநேயத்துடன் ஒற்றுமையுடன் மக்கள் பணியாற்றி வருகிறோம்.அனைத்து சமுதாய கூட்டமைப்பு கவன்சிலர் சேக் உசேன் ஒவ்வொரு முறை கூட்டம் நடைபெறும் போது யாராவது ஒருவரை அவமதித்து விட்டு வெளிநடப்பு செய்வார்.அது அவருக்கு வழக்கமான ஒன்றே ஆகும். இவ்வாறு அவர் நடந்து கொள்ளவில்லையென்றால் தான் ஆச்சரியப்பட வேண்டும்.சபை நாகரீகம் தெரியாத அவரது இந்த செயல் நாங்கள் அனைவரும் எதிர்பார்த்த ஒன்றுதான்.அவர் தவிர்த்து இங்கு உள்ள கவுன்சிலர்கள் பல்வேறு கட்சிகள் சார்ந்து இருக்கிறோம்.கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தால் பயனடைந்த பொதுமக்களுக்கு அனைத்தும் நன்றாக தெரியும்.ஒவ்வொரு கூட்டத்திலும் சக கவுன்சிலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்யும் அனைத்து சமுதாய கூட்டமைப்பு கவுன்சிலர் சேக் உசேனுக்கு இந்த கூட்டத்தை புறக்கணிக்க சாக்காக சேர்மன் கிடைத்திருக்கிறார்.சபையின் மாண்பை சீர்குலைக்கும் வகையில் அடிக்கடி கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்யும் அவருக்கு எதிர்ப்பு தெரிவிப்பதுடன் வன்மையான கண்டனங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.



