தமிழகம்மாவட்டச் செய்திகள்

கழிப்பறையில் ரகசிய கேமரா.. “விடியல் ரெசிடென்சி” பெண்கள் தங்கும் விடுதியில் பகீர் தகவல்கள்..!

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே டாட்டா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் பணியாற்றும் பெண் தொழிலாளர்கள் தங்கும் “விடியல் ரெசிடென்ஸி” விடுதியின் குளியல் அறையில் ரகசிய கேமராக்கள் வைக்கப்பட்டிருந்ததாகக் கண்டறிந்து, குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி 2,000-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று இரவு முதல் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீஸ் பேச்சுவார்த்தைக்குப் பிறகு போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டாலும், இன்றும் தொடரும் என அவர்கள் எச்சரித்துள்ளனர். சம்பவத்தில் சம்பந்தப்பட்ட மூன்று பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தமிழக அரசை விமர்சிக்கும் அரசியல் கட்சிகளின் குரல்களையும் தூண்டியுள்ளது.

ஓசூர் அருகே ராயக்கோட்டை வன்னியபுரம் கிராமத்தில் ஐஃபோன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் டாட்டா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் 6,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், பெரும்பாலும் பெண்கள், பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்காக லாலிக்கல் கிராமத்தில் ‘விடியல் ரெசிடென்சி’ என்ற பெயரில் நிறுவனத்தின் சார்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு அறையிலும் நான்கு பெண்கள் தங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று, விடுதியின் குளியல் அறையில் ரகசியமாக வைக்கப்பட்ட கேமராக்களை அங்கு தங்கியிருந்த பெண் தொழிலாளர்கள் கண்டறிந்தனர்.

இந்தக் கேமராக்கள் மூலம் இளம் பெண்கள் குளிக்கும் காட்சிகளை ரகசியமாக வீடியோ எடுக்கப்பட்டதை அறிந்ததும், அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக தொழிற்சாலை நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். இருப்பினும், உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால், நேற்று மாலை 7 மணி முதல் ஆயிரக்கணக்கான பெண்கள் விடுதி முன் சாலையில் அமர்ந்து போராட்டத்தைத் தொடங்கினர்.

விடிய விடிய நடந்த இந்தப் போராட்டத்தில் 2,000-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். “ரகசிய கேமரா வைத்தவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். நமது பாதுகாப்புக்கு உத்தரவாதம் தர வேண்டும்” என அவர்கள் வலியுறுத்தினர்.

போராட்டத்தின் தீவிரத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. போலீஸ், வருவாய்த் துறை அதிகாரிகள் ஆகியோர் அங்கு குவிந்தனர். இதற்கிடையில், போலீஸார் விடுதியில் பணியாற்றி வரும் ஒரு வடமாநில பெண்ணை நேற்று மாலையில் இருந்து தொடர்ந்து விசாரித்து, சம்பந்தப்பட்ட மூன்று குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.

ஓசூர் துணைக்காவல் கண்காணிப்பாளர் (சாரா) திருமதி அக்ரித்தி சங்கதுரை தலைமையில் போலீஸ் குழு சம்பவ இடத்தில் இருந்து விசாரணைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சங்கதுரை உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்

போலீஸ் அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இன்று அதிகாலை பெண்கள் தங்கள் அறைகளுக்கு திரும்பினர். இருப்பினும், “இன்றும் போராட்டம் தொடரும். நீதி கிடைக்காவிட்டால் மீண்டும் சாலைக்கு இறங்குவோம்” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் அண்புமணி ராமதாஸ், இச்சம்பவத்தை விமர்சித்து திமுக அரசை கண்டித்துள்ளார். “தமிழகத்தை உலுக்கிய இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்வதை அரசு கண்டுக்கொள்ளவில்லை” என அவர் கூறியுள்ளார்

தொழிற்சாலை நிர்வாகம் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடவில்லை. போலீஸ் விசாரணை முடிவுகளின் அடிப்படையில் மேலும் விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இச்சம்பவம், தொழிலாளர் பாதுகாப்பு, குறிப்பாக பெண்களின் தனியுரிமை குறித்து சமூகத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button